நான் அமைதியாக இருக்கப் போவதில்லை..! – தேனி சுந்தர்
“கடந்த சில இரவுகளாக நான் ஒரு நிமிடம் கூட தூங்கவில்லை. தாங்கமுடியாத அளவுக்கு நான் பயமுறுத்தப்படுகிறேன். சித்திரவதைகளின் மூலம் குற்றுயிராக்கப்படுகிறேன். மருத்துவ வசதி ஏதும் தரப்படவில்லை..”- கென் சரோ விவா. யார் இந்த கென் சரோ விவா. நாம் நைஜீரியாவுக்குப் போக வேண்டும். நைஜர் டெல்டா பகுதிகள் முழுவதும் அங்குள்ள எண்ணெய் வளங்களுக்காக ஷெல் கம்பெனியால் சூறையாடப்பட்டது. அந்த நிலங்களில் பதிக்கப்பட்ட குழாய்களின் துருப்பிடித்து உடைந்த துளைகளில் இருந்து வெளியேறும் எண்ணெய்க் கசிவால் எந்நேரமும் – நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக – தீ ஜீவாலைகள் எரிந்து கொண்டிருந்தன. பூமியின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் தீ ஜீவாலைகள் தெரிவதாக விண்வெளி வீர்ர்களே கூறியதாக பதிவுகள் இருக்கின்றன. அங்கு அப்போதிருந்த சர்வாதிகார ராணுவ அரசுக்கும் ஷெல் கம்பெனிக்கும் இடையிலான கள்ளக் கூட்டு காரணமாக இரக்கமின்றி நிலங்கள் சூறையாடப்பட்டன. அப்பகுதியில் வாழ்ந்த ஓகோனி மக்கள் விரட்டியடிக்கப்பட்டனர். அம்மக்கள் சொல்லொணாத் துயரங்களை அனுபவிக்கின்றனர். ஓகோனி மக்களின் இனக்குழுத் தலைவர் ஒருவரின் மகன் தான் கென்சரோ விவா. அந்த மக்களின் துயரங்களை தன் எழுத்துகள...