இந்த நூல் என்னை என் மாணவர்கள் முன்னிலையில் குற்றவாளியாக நிறுத்தி இருக்கிறது : பா.விமலாதேவி, ஆசிரியர்
உண்மையிலேயே இப்புத்தகத்தின் நூலாசிரியர் அவர்களுக்கு ரொம்ப தைரியம்தான். ஏனெனில் இத்தனை உண்மைகளை நறுக்குத் தெறித்தார் போல் பட்டென பதிவு செய்வதற்கு ஒரு மனோதிடம் வேண்டும். அதற்காக அவருக்கு ஒரு வாழ்த்துக்கள்.. சரி, தப்பாக போன அந்த ஜட்ஜ்மெண்ட் என்ன என்று பார்க்கலாம் வாங்க. முதலில் அந்த ஜட்ஜ்மெண்ட் தவறு என்று சொல்வது யார் என்று நினைக்கின்றீர்கள். ஒரு சில கட்டுரைகளில் மாணவன் சில கட்டுரைகளில் ஆசிரியர் சில கட்டுரைகளில் பொதுமக்களின் பொது புத்தி என எடுத்துக் கொள்கிறேன் நான். மொத்தத்தில் இந்த தீர்ப்பானது தவறு என்று உயர் அதிகாரிகளையும் , கல்வி நடைமுறைகளையும் அதனை வகுப்பறையில் பரிசோதிக்கும் ஆசிரியர்களையும் சுட்டுகிறது. கணிதமும் அறிவியலும் கசப்பென வாழ்ந்த ஒரு மாணவன் இரண்டையும் கற்கண்டாய் கையில் எடுத்து ஆசிரியராக உருமாறியபோது அவருள் எழும்பிய வினாக்களின் தொகுப்பு இக்கட்டுரைகள் எனலாம். வாசிக்கும்போது இவையெல்லாம் உண்மை நிகழ்வுகள் என்று தான் எடுத்துக் கொள்ள முடிந்தது. தன்னைவிட மேல்மட்ட அதிகாரியை எதிர்த்து கேள்வி கேட்பதற்கு எந்த ஒரு இளம் பணியாளருக்கும் மூத்த பணியாளர்கள் சொல்லித் தருவதில்லை. மாறாக எப்படி அவர...