நூல் அறிமுகம்: எல்லோரையும் எழுத வைக்கும் சிலேட்டுக்குச்சி – தேனி சுந்தர்
சிலேட்டுக்குச்சி.. அந்த வார்த்தையே அழகான வார்த்தை.. ஆயிரம் நினைவுகள் தோன்றும்.. ஒவ்வொருவரும் இன்னொரு முறை வாழ்ந்து பார்த்துவிட முடியாதா என ஏங்கும் குழந்தைப்பருவ நினைவுகளை ஓடும் நதியின் கரையில் மோதும் அலைகள் போல வாசிக்கும் ஒவ்வொரு பக்கத்திலும் உள்ளத்தோடு உரசி உரசி எழுப்பி விடும் நூலாக வெளிவந்துள்ளது. அரியலூரில் ஆசிரியராக வாழும் நண்பர் முத்துக்கண்ணனின் முதல் நூல். தேனி மாவட்டம் கூடலூர் அவருக்கு சொந்த ஊர். பணி நிமித்தம் வாக்கப்பட்டு போன ஊர் அரியலூர். சிலேட்டுக்குச்சி, முழுக்க முழுக்க கல்விக்கூட பதிவுகள், பகிர்வுகளின் தொகுப்பு.. ஏற்கனவே பல பதிவுகளை முகநூலில் வாசித்திருக்கிறேன்.. இருந்தாலும் தொகுப்பாக ஒரு சேர வாசிக்கும் போது பலவகைக் காய்கறிகள், பாயாசத்தோடு விருந்து சாப்பிட்ட மாதிரி இருக்கிறது எனக்கு. அத்தியாயங்கள் பதினேழு.. சிறுகதைகள் போல சம்பவங்களும் அதைச் சொல்லும் விதமும் வாசிக்க வாசிக்க அத்தனை அழகாக இருக்கிறது. முதல் அத்தியாயத்திலேயே ஒரு சிக்ஸர்.. அதில் வரும் மனோஜ் மொத்தப் புத்தகத்தையும் வாசித்து பிறகும் கடைசியாக ஒருமுறை உங்களைச் சிரிக்க வைப்பான்.. இரண்டு நாட்கள் கழித்து கூட...