ரவிக்குமார் எழுதிய “தொடுதிரை யுகத்தில் அம்பேத்கர்” – தேனி சுந்தர்

“உங்கள் மனிதத் தன்மையை மதிக்காத மதத்தில் ஏன் நீங்கள் இருக்க வேண்டும்.. உங்களுக்கு குடிக்கத் தண்ணீர் தராத மதத்தில் ஏன் நீங்கள் இருக்க வேண்டும்.. உங்களைக் கோயிலுக்குள் அனுமதிக்காத மதத்தில் ஏன் நீங்கள் இருக்க வேண்டும்..” என்கிற அம்பேத்கரின் கேள்விகளை நினைவூட்டுகின்ற இந்நூலாசிரியர், மக்களுக்காகத் தான் மதமேயொழிய மதத்திற்காக மக்கள் அல்ல என்பதை அறியாதவர்கள் தங்கள் சுயநலத்திற்காக அரசியலமைப்புச் சட்டத்தையே தகர்க்க முற்பட்டுள்ளனர். அவர்களது சுயநலமும் வகுப்புவாத அரசியலும் சிறுபான்மை மக்களிடம் மட்டுமின்றி தலித்துகளிடமும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆட்சியாளர்கள் இந்த அச்சத்தைப் போக்காவிட்டால் தலித் மக்கள் மதமாற்றம் என்னும் பாதுகாப்பைத் தேடிச் செல்வதை யாராலும் தடுக்க முடியாது எனவும் எச்சரிக்கிறார் ரவிக்குமார்..


விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் அவர்கள் எழுதிய சமீபத்திய நூல். மணற்கேணி வெளியீடாக வந்துள்ளது. அதிகாரத்துவ எதிர்ப்பு நூல் வரிசையில் இது நான்காவது நூல். சிறிய நூல் தான் என்றாலும் ஏராளமான விவாதங்களை எழுப்புவதாக உள்ளது.


தொடுதிரை யுகத்தில் அம்பேத்கர் : ஒரு சமூகத்திற்கு குறிப்பாக தலித் மக்களுக்கு ஆள்பலம், பொருளாதார பலம், மனோபலம் ஆகிய மூன்றும் அவசியம் என்றார் அம்பேத்கர். அவருடைய முயற்சியிலும் அவருக்குப் பிந்தைய பலரது முயற்சியிலும் ஏராளாமான தலித் அமைப்புகள், கட்சிகள் உருவானாலும் கூட அம்பேத்கர் தன்னுடைய வாழ்நாளில் போராடிப் பெற்றுத் தந்த உரிமைகளைத் தவிர புதிதாக எந்த உரிமையையும் பெற முடியவில்லை. எனவே தாழ்த்தப்பட்ட மக்கள் தங்கள் உட்சாதி அடையாளங்களை விட்டு விட்டு ஒன்றிணைய வேண்டும். தொழில்நுட்ப ரீதியில் தங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும். சனாதன பயங்கரவாதத்தின் சூழ்ச்சிகளைப் புரிந்து கொண்டு பண்பாட்டுத் தளத்தில் அதற்கு எதிரான உத்திகளை உருவாக்க வேண்டும்.

அம்பேத்கரும் ஜனநாயகமும் : ஜனநாயகம் எப்போது அர்த்தமுள்ளதாக இருக்கும் என்பது குறித்து அம்பேத்கரின் ஆழமான கருத்துகள் இன்றைய சூழ்நிலையில் அவசியமானவை. ஜனநாயகம் என்பது அரசு நிர்வாக முறை மட்டும் அல்ல. அது சமூக நடைமுறையாகவும் இருக்க வேண்டும். ஜனநாயகம் வலியுறுத்துகிற சுதந்திரம், சமத்துவம் அர்த்தப்பட வேண்டும் என்றால் சமூகத்தில் சகோதரத்துவம் மிக அவசியம். சகோதரத்துவம் இல்லையென்றால் அரசியல் ஜனநாயகம் அர்த்தமற்றதாகி விடும். சமூகத்தில் தனிப்பட்ட நபர்கள் தாங்கள் சார்ந்த சமூகத்தை மற்ற சமூகங்களை மேலானதாகக் கருதினால், தன் சொந்த சாதி நலன்களுக்காகவே சட்டத்தையும் வாய்ப்புகளையும் வக்கிரமாகப் பயன்படுத்தினால் அது மக்களால் மக்களுக்காக நடத்தப்படும் அரசாக இருந்தாலும் அது மக்களுடைய அரசாக இருக்க முடியாது. 

ஜனநாயகம் எல்லா நாடுகளிலும் ஒரே அர்த்தம் உடையவையாக இல்லை. வடிவத்திலும் பண்பிலும் வேறு வேறாக உள்ளன. இந்தியாவில் இருக்கிற ஜனநாயகம் மேலும் அர்த்தப்பட வேண்டுமாயின் சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகள் ஒழிக்கப்பட வேண்டும். சட்டம் அனைவருக்கும் சமமாகத் தான் இருந்தாக வேண்டும். அரசு நிர்வாகம் அனைவருக்கும் சமமாக இருக்கிறதா என்பது மிக முக்கியம். அதேபோல ஜனநாயகம் தழைக்க எதிர்க்கட்சிகள் அவசியம். அரசியலமைப்புச் சட்ட நடைமுறையும் அதையும் தாண்டி தார்மீக ஒழுக்கமும் ஆள்பவர்களுக்கும் சமூகத்திற்கும் மிக முக்கியம். அநீதிக்கு எதிராகப் போராடும் பொது மனச்சாட்சி முக்கியம்.


அம்பேத்கரும் அதிபர் ஆட்சி முறையும் : 2018 ஜனவரியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள் ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு ஆதரவாகப் பேசிய கருத்துகள் எத்தகைய ஆபத்துகளை உருவாக்கும் என்பது குறித்து ஆழமான கருத்துகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இந்தக் கருத்தாக்கம் புதிய ஒன்றல்ல. ஏற்கனவே வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் எல்.கே.அத்வானி இதுபோன்ற கருத்துகளைப் பேசியிருக்கிறார். அப்போது இந்தியாவின் இறையாண்மையைக் காக்கும் விதமாகப் பேசி அரணாக நின்றவர் அப்போதைய குடியரசுத் தலைவர் கே.ஆர்.நாராயணன் என்பதும் குறிப்பிடப்படுகிறது. நாடு முழுவதும் நாடாளுமன்றத்திற்கும் சட்டமன்றங்களுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்துவது குறித்து இந்திய சுதந்திர காலந்தொட்டே தலைவர்கள், தேர்தல் ஆணையாளர்கள் அனைவரும் ஆழமான புரிதலோடு பேசி வந்திருக்கின்றனர்.

கடந்த 1999 முதல் 2014 வரையிலான காலகட்டத்தில் நாடாளுமன்றத் தேர்தலோடு இணைத்து நடத்தப்பட்ட 16 சட்டமன்றத் தேர்தல்களில் வாக்களித்த மக்கள் 70% இரண்டு தேர்தல்களிலும் ஒரே கட்சிக்கே வாக்களித்துள்ளனர் என்கிறதாம் ஓர் ஆய்வு. 2014ல் இது 86% ஆக உயர்ந்துள்ளதாம். மேலும் நாடாளுமன்றத் தேர்தலோடு சட்டமன்றத் தேர்தல்களும் இணைத்து நடத்தப்படும் போது தேசியப் பிரச்சனைகள் மட்டுமே முக்கியத்துவம் பெறுவதால் பிற மாநிலக் கட்சிகளும் இதர கட்சிகளும் முக்கியத்துவம் இழந்து காலப்போக்கில் காணாமல் போகவும் வாய்ப்புள்ளது. பா.ஜ.க. மட்டும் மீண்டும் மீண்டும் ஒரே நாடு.. ஒரே தேர்தல் என முழங்குவதன் அர்த்தம் புரிகிறது.

அடிக்கடி தேர்தல்கள் நடத்துவதால் தேசத்திற்கு தேவையற்ற செலவுகளும் பணிச்சுமையும் ஏற்படுகிறது என்று நீங்கள் வருந்துவது உண்மையென்றால் வாஜ்பாய் ஆட்சிக்காலத்தில் ஐந்து முறையும் மோடி ஆட்சியில் இது வரை மூன்று முறையும் மாநில அரசுகளைக் களைத்து குடியரசுத் தலைவர் ஆட்சியைக் கொண்டு வந்தது ஏன் என்று நூலாசிரியர் கேள்வி எழுப்புகிறார்.

அம்பேத்கரும் விகிதாச்சார தேர்தல் முறையும்: விகிதாச்சார தேர்தல் முறை குறித்தும் நேரு முதற்கொண்டு இன்றைய பலகட்சிகள் வரையிலும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். அனைவருக்கும் வாக்குரிமை.. ஒவ்வொரு வாக்கிற்கும் சம மதிப்பு என்கிற அரசியல் ஜனநாயகத்தை பொய்த்துப் போகச் செய்கிறது தற்போதைய தேர்வு முறை. அதிகமான வாக்குகள் பெற்றோர் வெற்றி என்றால் மற்ற வாக்குகள் அனைத்தும் செல்லாத வாக்குகளாக அல்லவா போய்விடுகின்றன. அந்த வாக்குகளின் மதிப்பு இல்லாமல் போய்விடுகின்றதே என்கிற கேள்வி நியாயமானதாகத் தான் இருக்கிறது. அரசியல் கட்சித் தலைவர்கள் மட்டுமின்றி முன்னாள் தேர்தல் ஆணையாளர்கள் பலரும் இந்திய சட்ட ஆணையமும் கூட விகிதாச்சார தேர்தல் முறையை வலியுறுத்தியுள்ளதை அறிய முடிகிறது. மேலும் இந்தியாவைப் போலவே தேர்தல் நடைமுறைகளைப் பின்பற்றிய 89 நாடுகள் இப்போது விகிதாச்சார தேர்தல் முறைக்கு மாறிவிட்டன என்பது கூடுதல் தகவல்.

2014 நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. பெற்ற வாக்குகள் 31% மட்டுமே. அது ஒட்டுமொத்த இந்திய மக்கள் தொகையில் 14% மட்டுமே. வாக்காளர்கள் மட்டும் என்றாலும் கூட 20% மட்டுமே. எதிர்த்து வாக்களித்தவர்கள் 69% பேர் என்றாலும் கூட அறுதிப் பெரும்பான்மை பெற்று ஆட்சியமைத்தது பா.ஜ.க. அதே தேர்தலில் உ.பி.யில் 20% வாக்குகள் பெற்ற பகுஜன் சமாஜ் கட்சிக்கும் தமிழகத்தில் 27% வாக்குகளைப் பெற்ற திமுகவுக்கும் ஒடிசாவில் 26% வாக்குகள் காங்கிரஸ் கட்சிக்கும் ஒரு இடம் கூட கிடைக்கவில்லை. மேற்கு வங்கத்தில் 30% வாக்குகள் பெற்ற இடதுசாரிகளுக்கு கிடைத்தது இரண்டு இடங்கள் மட்டுமே என்கிற தகவல்கள் அம்பேத்கரின் ஒவ்வொரு வாக்குக்கும் சம மதிப்பு என்கிற கோட்பாட்டை அர்த்தம் இழக்கச் செய்கிறது. 

1932ல் ஜெர்மனியில் நடந்த தேர்தலில் போட்டியிட்ட ஹிட்லர் 33.1% வாக்குகளையே பெற்றார். அதன் தொடர்ச்சியாக அவரே அதிபர் ஆனார். அதற்கான விளைவுகளை அந்நாடு சந்தித்தது. அந்த அனுபவங்களின் அடிப்படையில் 1949 முதலாக அந்நாடு விகிதாச்சார தேர்தல் முறையையே பின்பற்றி வருகிறது. இந்தியாவில் மோடி 31% வாக்குகள் பெற்று ஆட்சிக்கு வந்துள்ளார். அதன் விளைவுகளை நாடு சந்தித்து வருகிறது. இந்தியாவில் தேர்தல் சீர்திருத்தங்கள் பேசுவதற்கு இதைவிடப் பொருத்தமான நேரம் இனிமேல் நிச்சயம் வரப்போவதில்லை என்கிறார் நூலாசிரியர்.

அம்பேத்கரே கூட விகிதாச்சார தேர்தல் முறையை எதிர்த்தார் என்கிற ஆச்சரியமூட்டும் செய்தியும் பதிவு செய்யப்பட்டுள்ளது. தங்களுக்கு கிடைத்த குறைந்தபட்ச வாக்குகளையே அறுதிப் பெரும்பான்மையாகவும் அதையே அரசியல் பெரும்பான்மையாகவும் வகுப்புவாதப் பெரும்பான்மையாகவும் மாற்றப் பார்க்கிற அரசியல் சூழலில் விகிதாச்சார தேர்தல் முறைக்கான அழுத்தமான குரல்கள் இன்னும் அதிகமாக ஒலிக்க வேண்டியது அவசியமாக உள்ளது.

சாதி அடிப்படைவாதம் பேசுவது சனாதன பயங்கரவாதத்திற்கு மட்டுமே பயன்படும். சாதிப் பெருமைகளை மீண்டும் மீண்டும் பேசுவது சாதிய அணிதிரட்டலுக்கும் அதன் மூலம் வன்முறைகளுக்கும் தான் வழிவகுக்கும். எனவே ஒடுக்கப்பட்டவர்களாக ஒன்றுபட வேண்டும். பட்டியலினச் சாதிகள் அல்லது சார்ந்த கட்சிகள் மட்டும் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டாலும் கூட அவை எதிர்மறை விளைவுகளையே ஏற்படுத்தும் எனவும் சுட்டிக்காட்டப்படுகிறது. மேலும் அப்படி சாதி, மத, இன, மொழி அடிப்படையில் வாக்குச் சேகரிப்பதும் பிரச்சாரம் செய்வதும் சட்ட விதிமுறைகளுக்கு எதிரானதும் ஆகும். இத்தகைய முயற்சிகள் சனாதன சக்திகளுக்கே பயன்படும் என நூலாசிரியர் எச்சரிக்கிறார்.


மொத்தம் பத்து அத்தியாயங்களில் அற்புதமான பல விவாதங்களை எழுப்பியுள்ளார் நூலாசிரியர். இது தொடர்ச்சியான உரையாடலுக்கான நுலாக நிச்சயம் விளங்கும்.

அம்பேத்கர் வலியுறுத்திய ஜனநாயகத்திற்கு ஆபத்து விளைவிக்கும் போக்குகள் வீச்சாக முன்னெடுக்கப்படும் இந்தக் காலகட்டத்தில் அம்பேத்கரின் மேதைமையை அறிவதற்காக இல்லையென்றாலும் இந்த நாட்டை மேலும் ஜனநாயகப்படுத்துவதற்காகவும் அவரவர் உரிமைகளைப் பாதுகாப்பதற்காகவும் நாம் ஒவ்வொருவரும் அம்பேத்கரைப் படிப்பது அவசியம் என்கிறார் நூலாசிரியர். அவசியம் படியுங்கள். மணற்கேணி வெளியீடு. விலை ரூ.60.

நூல்: தொடுதிரை யுகத்தில் அம்பேத்கர் 
ஆசிரியர்: முனைவர்.ரவிக்குமார் 
வெளியீடு: மணற்கேணி / விலை: ரூ.60
– தேனி சுந்தர்

Comments

Popular posts from this blog

அறிவை விரிவு செய்..... : உலகப் புத்தக தினம்-ஏப்ரல் 23

மாணவர் மனசு வாசிப்பு அனுபவம் : ஐ.சுமதி, ஆசிரியர்

தேனியில் இருந்து வந்த சுந்தரின் மூன்று முத்துகள்..!