மாணவர் மனசு : வாசிப்பு அனுபவம் : வே.சங்கர், சேலம்
குழந்தைகள் என்றாலே குதூகலம்தான்..எல்லோருக்கும் அவரவர் குழந்தைப் பருவத்தை நினைத்தாலே மனதிற்குள் ஓர் மகிழ்ச்சி துள்ளியெழும்.. நூலின் ஆசிரியர் திரு.தேனி சுந்தர் அவர்கள் ஓர் தொடக்கப்பள்ளி ஆசிரியர்..அவர் தன் பணிச்சூழலில், பள்ளியில் மாணவர்களுடன் ஏற்பட்ட அனுபவங்களை அச்சுப் பிசகாமல் அச்சில் ஏற்றியிருக்கிறார்கள்.
தொடக்கநிலை மாணவப் பருவம் என்றாலே சிறு சிறு குறும்புத்தனங்களும், அப்பாவித்தனமும் நிறைந்ததே என அறிவோம். இங்கே அப்படிப்பட்ட 5 முதல் 10 வயதிற்குட்பட்ட மாணவர்களின் பள்ளி மற்றும் ஆசிரியருடனான செயல்பாடுகள் பற்றிய தனித்தனி தொகுப்பாக எழுதப்பட்டுள்ளது.
எழுத்தின் எளிய நடை என்னை மிகவும் ஈர்த்துவிட்டது..இலக்கிய நடையில் அல்லாமல் அவரது வட்டார வழக்கு மொழிச் சொற்களையே பயன்படுத்தி அப்படியே எழுதப்பட்டதை வாசிக்கும்போது உடன் நேரில் நாமும் இருப்பதுபோலவே உணரவைக்கிறது. வாசிக்கும்போதே நிச்சயம் நம்முடைய குழந்தைப்பருவ சேட்டைகளும் நினைக்கு வந்துசெல்லும் என்பதில் ஐயமில்லை. குழந்தைகளோடு குழந்தைகளாய் ஒன்றிப்போய் பணியைச் செய்வதற்கும் ஓர் திறமை வேண்டும்.
நூலுள் சில... ஒரு மாணவனின் குடிகாரத் தகப்பன்.. தன் மகனை எப்படியாவது நல்லாப் படிக்க வச்சுப்படுங்க சாமீ..அவனுக்கு அதைத் தவிர வேறு சொத்து எதுவும் வேணாம்னு சொன்னது.. குடியை விடக்கூடாதா எனக் கடிந்துகொண்டபோது அவர் செய்யும் "கழிவறை கழுவும்" தொழில்பற்றி சொல்லும்போது மனம் கனக்கவும்,கண்கள் கலங்கவும்தான் செய்கிறது.
அடுத்து.. ஒன்றாம் வகுப்புப் படிக்கும் ஓர் குழந்தை,,அசரமாய் கழிவறைக்குப் போவதற்குள் கால்சட்டையிலேயே மலம் கழித்துவிடுகிறது..அதை ஆசிரியரே சுத்தம் செய்ய வேண்டிய சூழல்..கழிவறையையும் சுத்தம் செய்யவேண்டிய நிலை.. தான் செய்ததாக ஆசிரியர் கூறும்போது அவரை எண்ணி வியக்கிறேன்..அரசின் நிர்வாக நிலையை எண்ணி வெட்கப்படுகிறேன்.. இவ்வாறாக நூலாசிரியர் தன்னின் பல அனுபவங்களை அழகாக இங்கே கூறியுள்ளார்.
தமிழகத்தின் எல்லாப் பள்ளிகளிலும் "மாணவர் மனசு" எனும் பெட்டி உள்ளது..ஆனால் நானறிந்தவரை எங்கும் செயல்பாட்டில்தான் இல்லை.. அருமை திரு #தேனி_சுந்தர் அவர்களே..மனமார்ந்த வாழ்த்துகள், பாராட்டுகள்..
அவரின் அனுபங்களைப் பற்றி கருத்துகள் கூற அழைப்பு எண்ணையும் புத்தகத்தில் கொடுத்திருக்காரு.. அழைத்துப் பேசி அவருக்கு என் வாழ்த்துகளைத் தெரிவித்துவிட்டேன்.. வாசிப்பை நேசிப்போம் குழு பற்றியும் பகிர்ந்துகொண்டேன்.. எழுதும் இந்த வாசிப்பு அனுபவத்தையும் அவருக்கு அனுப்பச்சொல்லி கேட்டுக்கொண்டார்.
நானும் ஓர் தொடக்க / நடுநிலைப்பள்ளி ஆசிரியராக 20 ஆண்டுகளைக் கடந்து பணியாற்றுகிறேன்..இவை போன்ற அனுபவங்களில் சிலவற்றைப் பெற்றுள்ளேன். ஓர் ஆசிரியராய் இந்நூலை வாசிக்க நான் பெருமைப்படுகிறேன்..
வே.சங்கர்
சேலம், 19.2.25

Comments
Post a Comment