மனமாற்றத்தை ஏற்படுத்தும் புத்தகம்.. டுஜக் டுஜக் - ஒரு அப்பாவின் டைரி : அமலராஜன்
அன்புமிக்க சுந்தருக்கு வணக்கம்.. டுஜக்.. டுஜக்... புத்தகம் படித்து பார்த்தேன்... மிகவும் அருமை. சிறப்பான வடிவமைப்பு.. வழக்கம் போல் நூலுக்கு வலு சேர்க்கும் அன்பு அண்ணன் ஸ்ரீரசா அவர்களின் பேசும் ஓவியங்கள் அருமை. எம் பேராசான் ... எங்கள் வளர்ச்சியில் தொடர்ந்து அக்கறை செலுத்தி வரும் பேரா.ச. மாடசாமி அவர்களின் துவக்கப் பக்கங்கள் உங்களுக்கு கிடைத்த மிகப் பெரிய பரிசு...... கல்வியில் தன்னை ஈடுபடுத்தியது மட்டுமல்லாமல் எல்லோரையும் கல்வியின்பால் ஈர்க்கும் காந்தமாய் இன்றளவும் செயல்படும் அருமை நண்பர் முனைவர் ராமானுஜம் அவர்களின் பாராட்டு தங்களுக்கு கிடைத்த மற்றொரு மிகப் பெரிய பரிசு....
இனி டுஜக்.. டுஜக்... புத்தகத்துக்கு வருவோம். குழந்தை மொழிகளை கண்டறிந்து அதை நூல் வடிவில் கொண்டு வந்த பெருமை இப்புத்தகத்திற்கு உரியது. இப்புத்தகம் ஒரு மைல்கல் எனலாம்.. வழக்கமாய் பெரியவர்களின் மொழியை கேட்டு பழக்கப்பட்ட நமக்கு குழந்தைகளின் மொழியை எப்படி ரசிப்பது என நினைவூட்டிச் செல்கிறார் சுந்தர்.
வழக்கமாய் மழலைச் சொற்களின் மொழி பெயர்ப்பாளராக தாய்தான் இருப்பார். இங்கு தந்தை சுந்தரே மொழிபெயர்ப்பாளராக இருந்து இந்நூலைப் படைத்துள்ளார். குழந்தைகளின் மழலைப் பேச்சு கேட்பதோடு மட்டுமல்லாமல் ரசனையைத் தாண்டி அவர்களில் இருந்து வெளிப்படும் புதுமையான பல விஷயங்களையும் நூலில் தொகுத்து இருப்பது இந்நூலின் மிகச் சிறப்பு அம்சமாகும்.
படிப்பவரின் மனநிலையில் மாற்றத்தை எப்புத்தகம் கொண்டு வருகிறதோ அப்புத்தகமே மிகச் சிறந்த புத்தகம் என கருதுகிறேன். அந்த வகையில் இப்புத்தகம் சிறப்பிடம் பெறுகிறது... படித்து கருத்து பகிர்ந்த பலரும் தன்னிடம் இப்புத்தகம் பெரிய மன மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்று கூறும் போது உண்மையில் மகிழ்ச்சி அடைகிறேன். இதுவரையில் நாம் தவறவிட்ட குழந்தை மொழிகளை மீண்டும் கடந்த காலத்திற்கு அழைத்துச் செல்கிறது இந்தப் புத்தகம்...
குழந்தை மொழியை இப்படியெல்லாம் ரசிக்கலாம்.... படைக்கலாம்.... என்பதற்கு முன்னுதாரணமாக இப்புத்தகத்தை கொண்டு வந்து அருமை நண்பர் சுந்தர் அவர்களுக்கு என் உளம் கனிந்த பாராட்டுக்கள்.... அனுபவங்களை புத்தக வடிவில் கொண்டுவர தவறி விட்டோமே என்ற ஒரு குற்ற உணர்வை ஏற்படுத்துவதோடு ..... வரும் காலத்திலாவது அதை செயல்படுத்த வேண்டும் என்ற ஒரு உந்துதலை இப்புத்தகம் என்னுள் ஏற்படுத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.
குழந்தைகளின் குரல்களை பொது அரங்கில் ஒலிப்பதற்கு.... சிறப்பான புத்தக வடிவில் வெளிக்கொணர்ந்த பாரதி புத்தகாலயம் நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்
....
அன்புடன்,
அமலராஜன் அ.
Comments
Post a Comment