நட்சத்திரங்கள் எட்டிப் பார்க்கின்றன : பெ.விஜயராஜ் காந்தி
தேனி சுந்தர் எழுதிய நட்சத்திரங்கள் எட்டிப் பார்க்கின்றன என்ற நூல் கிடைக்கப்பெற்றேன். நூலில் புகழ்மதி மற்றும் டார்வின் இருவருடன் நாம் பேசி பழகி உறவாடி மகிழ்ந்தது போல் ஒரு உணர்வு.
ரோட்டில் கிடக்கும் எலுமிச்சம்பழம் மூலமாக பேய், சாமி இரண்டும் சும்மாச்சுக்கும் என்பதை புகழ்மதி எவ்வளவு அருமையாக எடுத்துரைக்கிறாள். அபாரம். (பக்கம் 22)
விலங்கில் இருந்து மனிதன் பிறந்தான் என்ற வாக்கியத்தை புரிந்து கொள்வதற்கு குழந்தைகள் தயாராக இருக்கிறார்களா என்பதனை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். நம்முடைய அறிவை புகுத்துகிறோம் என்ற பெயரில் எதையாவது சொல்ல அவர்கள் ஏப்பா நீயுமா குரங்கா இருந்த என்ற கேள்வி உடனடியாக நம்மை நோக்கி வரும். ஜாக்கிரதையாக நாம் பதில் சொல்ல வேண்டும்.
சிறு வயது குழந்தைகள் பெற்றவர்களின் பேச்சை கேட்பதில்லை என்று யார் சொல்வது... நம்மைப் போலவே அவர்கள். ஆம். செல்லை வச்சிருந்தா நாம் உடனடியாக கடைக்கு கிளம்புவோமா... (பக்கம் 60).
எல்லா நட்சத்திரங்களும் நம்மளவே பார்த்துக் கொண்டு இருக்கிறது என்று குழந்தைகள் சொல்லும்பொழுது நாம் குழந்தையின் வாயைப் பார்ப்போம். இது இயல்பு. ஆனால் குழந்தையாக நாம் மாறும்பொழுது அனைத்து நட்சத்திரங்களும் நம்மை பார்க்கும் என்று நாமும் உணர்வோம்.
வாசிக்க வேண்டிய புத்தகம். பாரதி புத்தகாலயம். விலை 60/-
-
பெ.விஜயராஜ் காந்தி

Comments
Post a Comment